மும்பை கடற்கரைக்கு அருகே சர்வதேச எண்ணெய் கடத்தல் வலையமைப்பை ஐசிஜி முறியடித்தது
மும்பை: இந்திய கடலோர காவல் படை (ஐசிஜி) கடல்–வான்வழி வலையமைப்பு அடிப்படையிலான முக்கிய நடவடிக்கையின் மூலம் சர்வதேச எண்ணெய் கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளது. மோதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோத எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த சரக்குகளை கடத்த பயன்படுத்தப்பட்ட நுட்பமான செயல்முறைகள் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த மாதம் 5-ஆம் தேதி மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் மூன்று சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. நேற்று இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை நிறைவடைந்து, முழு கடத்தல் வலையமைப்பையும் ஐசிஜி கண்டறிந்தது.
விசாரணையில், குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த சரக்குகளை சர்வதேச கடற்பரப்பில் மொட்டார் டாங்கர்களுக்கு நடுக்கடலில் மாற்றம் செய்து வந்தது தெரியவந்தது. சரக்குகளின் மூலத்தை மறைத்து உலக சந்தைகளில் பெரும் சட்டவிரோத லாபம் ஈட்டுவதற்காக இந்த ரகசிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கப்பல்களின் விரிவான சோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு, மின்னணு தரவு பகுப்பாய்வு மற்றும் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணை ஆகியவற்றின் மூலம் ஐசிஜி முழு செயல்பாட்டு தொடர்களையும் கண்டறிந்து அதன் சர்வதேச பரிமாணத்தை உறுதி செய்தது.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை இந்திய கடலோர காவல் படையின் மேம்பட்ட கண்காணிப்பு திறன்களையும், இந்தியாவின் கடல் நலன்களை பாதுகாப்பதற்கும் மேற்கு கடற்கரையில் கடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான அதன் உறுதியையும் வெளிப்படுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

